A tourist van caught fire

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த ராசாம்பாளையம், புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரத் (23). இவர் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்துள்ளார். இன்று காலை பரத் ஈரோடு மூல பாளையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

Advertisment

இதற்காக இன்று காலை பரத் சுற்றுலா வேனை எடுத்துக் கொண்டு மூலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டல் அடுத்த வேப்பம்பாளையம் பிரிவு அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பரத் உடனடியாக சுற்றுலா வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வேன் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்துக்குள்ளான சுற்றுலா வேனில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. விபத்துக்குள்ளான இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் இருந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தக்க சமயத்திற்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.