Skip to main content

கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு சம்பளம் தராததால் ஊழியர்கள் முற்றுகை

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

tondiarpeat corona employees

 

 

கரோனா நோய் தொற்றால் சென்னை நகரில் பொதுமக்கள் தொடர்ந்து கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாநகராட்சி ஒவ்வொரு வார்டுக்கும் தற்காலிக பணியாளர்களை நியமித்து வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ள நபர்களை கண்காணித்து அவர்களுக்கு தினமும் டெம்பரேச்சர் பார்த்து, அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா அவ்வாறு இருந்தால் அவர்களை அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் என்ற அளவில் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபோன்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் தற்காலிக ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் முறையாக வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் இது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் சுமார் 500 பேரை நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை வீடு வீடாக சென்று டெம்பரேச்சர் பார்க்க பயன்படுத்திவந்த கருவிகளையும் ஒப்படைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முன் களப்பணியாளர்கள் இன்று சென்னை தண்டையார்பேட்டை மண்டல மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டரை மாத சம்பளத்தை தர வேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு மாநகராட்சி தொடர்ந்து பணி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். பின் மாநகராட்சி மண்டல அலுவலரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர். 

 

இதுகுறித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த முன் களப்பணியாளர்கள் கூறும்போது, “மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நாங்கள் மாநகராட்சி கேட்டுக் கொண்டதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதில் நாங்கள் பலர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

 

ஆனால், எங்களுக்கு இதுவரை இரண்டரை மாத சம்பளம் தராமல் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று திடீரென எங்களிடம் உள்ள டெம்பரேச்சர் கருவி பல்ஸ் பார்க்கும் மிஷின் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் நாளை முதல் உங்களுக்கு வேலை இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்நிலையில் எங்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியது எந்த விதத்தில் நியாயம். எனவே எங்களுக்கு நின்றுபோன சம்பளத்தை உடனே வழங்கவேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.