Tomatoes are selling at Rs 120 per kg reduced by Rs 20

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 150 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 300 ரேசன் கடைகளில் விற்பனையைத் தொடங்கியது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மற்ற இடங்களில் தக்காளி அதிக விலைக்கு விற்கப்பட்டது.

Advertisment

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத்தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் ரக தக்காளி ரூ.120க்கும், இரண்டாம் ரக தக்காளி ரூ.80க்கும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.