Skip to main content

“தமிழகத்தில் அடாவடித்தனமாக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடிகள் கைப்பற்றப்படும்” - வேல்முருகன் 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Toll gate issue TVK Velmurugan press meet

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் அந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நிகழ்ந்தது. 

 

அந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் விவசாய நிலங்கள் வழியாக பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து ஆயில் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், உயர் கோபுர மின் கம்பங்கள் அமைத்து புதிய பாதையை வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், மின் கோபுரங்கள் அமைக்கும் நிலம் மற்றும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் குழாய் பதித்து எடுத்துச்செல்லும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பின்னரே அதில் குழாய்கள் அமைப்பது உயர் கோபுர மின் கம்பங்கள் அமைப்பதும் பணி தொடர வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்காத வரை பணிகளை செய்யக்கூடாது. 

 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு மத்திய அரசு தேர்வு முறையில் பணிநியமனம் செய்து வருகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 46 பேர் மட்டுமே பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். மற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுள்ளனர். அதை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 90% வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இந்திய அஞ்சல் துறைக்கு சொந்தமான சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தைப் பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகள் நான்கு வழிச்சாலை அமைக்க வேலையை முழுமையாக சாலை போடும் பணியை செய்யாமல் கட்டண வசூல் செய்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அப்படி அடாவடித்தனமாக சுங்க கட்டணங்களை வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்தி சுங்கச்சாவடிகளை விரைவில் கைப்பற்றும்” எனக் கடுமையாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.