Skip to main content

பொங்கல் பரிசுத் தொகுப்பு; நாளை முதல் டோக்கன்!

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Token distribution for Pongal gift package from tomorrow

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாகத் தமிழக அரசால் கடந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டும்(2024) தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று(05/01/2024) இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களைப் பெறக் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை கண்காணிக்கத் தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ. 1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டோக்கன் மூலம் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்.பி.ஐ-யில் இருந்து பணம் மாவட்ட ரீதியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்