Skip to main content

ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா!!! -தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!! 

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
TODAY CORONA RATE IN TAMILNADU

 

இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், அறிகுறி உள்ளவர்களையும் அறிகுறி இல்லாதவர்களும் அரசு ஒரே விதத்தில் அணுகுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் யோசனை கூறினார். ஆனால் முதல்வரின் உத்தரவுபடி குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் முகக் கவசங்கள் ஏற்கனவே  விநியோகிக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 62 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

முதியவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. களப்பணியாளர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மருந்துகள் வழங்கப்படுகிறது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4,343 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களாக மூவாயிரத்தை தாண்டி பதிவான நிலையில் இன்று முதன் முறையாக தமிழகத்தில் 4,300க்கும் மேற்பட்ட  எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 2,027 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்தமாக 62,598 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

TODAY CORONA RATE IN TAMILNADU


சென்னையில் 28வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துமனைகளில் 37 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 33 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர்  கரோனாவிலிருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இதுவரை 56,021 பேர் மொத்தமாக குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

மதுரையில் இன்று ஒரே நாளில் 259 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை  கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,117 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,139 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய இன்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 74 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை சேலம் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.