தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 5,388 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 45,881 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,367 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 12-வது நாளாக 1,000-க்கும் மேலாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,74,143 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில் 80,868 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இன்று மேலும் 5,572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 62 பேர் இறந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,846 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 4,026 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சில நாட்களாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கோவையில் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கோவையில் ஒரே நாளில் 468 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 337 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.