தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61,342 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 6,993 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்தாவது நாளாக ஐயாயிரத்திற்கும் மேலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,138 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 24- ஆவது நாளாக 2,000-க்கும் குறைவாக சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 95,857 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 54,896 பேர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 5,723 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,249 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவிற்குச் சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே போல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 77 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 50 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 3,500 வரை கடந்து, 3,571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 58 ஆவது நாளாக உயிரிழப்பு என்பது இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் கரோனாவால் இதுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 233 பேரும், திருவள்ளூரில் 214, காஞ்சிபுரம் 94, மதுரை 216, ராமநாதபுரம் 59, திருச்சி 59 என உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளது. அதேபோல் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 1,539 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்றும் 5 ஆயிரத்தைக் கடந்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை தவிர பிற மாவட்டங்களில் 5,855 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கரோனா மொத்த பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 249 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 10,057 ஆக மொத்த பாதிப்பு அதிகரித்துள்ளது.