Skip to main content

‘குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
TNPSC Important Notification for Group-II Candidates

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 11, 2024 அன்று டி.என்.பி.எஸ்.பி. வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று (02-02-24) வெளியிட்டது. 

இந்த நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

சார்ந்த செய்திகள்