Skip to main content

குரூப் 2 முதன்மைத் தேர்வு; மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல் 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

tnpsc group two main exam related seeman statement 

 

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 5446 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 முதல்நிலைத் தேர்வு தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 25 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டன. காலையில் நடத்தப்பட்ட தமிழ்த் தாள் தேர்வில், உதாரணமாக ஒவ்வொரு தேர்வருக்கும் கொடுக்கப்பட்ட பதிவெண், கேள்வித்தாளிலும் விடைத்தாளிலும் இடம் பெற்றிருக்கும். அதன்படி, கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்ட பதிவெண் உடைய தேர்வருக்கு அந்த குறிப்பிட்ட கேள்வித்தாள் செல்ல வேண்டும். இது புதிதாக இவ்வாண்டு தொடங்கப்பட்ட ஏற்பாடு என்பதால் முறையாக செய்யப்படவில்லை.

 

இதனால் தேர்வர்களுக்கு வேறுவேறு பதிவெண்களை கொண்ட வினாத்தாள்களும் விடைத்தாள்களும் வழங்கப்பட்டன. சிறிது நேரம் கழித்தே இந்த தவறு உணரப்பட்டதால், கண்காணிப்பாளர்கள் மீண்டும் அந்த வினாத்தாளை வாங்கி சரியான தேர்வர்களுக்கு வழங்கினர். இதனால் சிறிது நேரம் வீணானது. அதேசமயம், பதிவெண்ணை சரியாக காணாத தேர்வர்களும் விடைகளை குறித்துவிட்டனர். இதனால் சரியான பதிவெண்கள் கொண்ட தேர்வர்கள் அந்த விடைகளை மாற்ற முடியாமல் இருந்தது. தொடர்ந்து மாலை தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உறை, தேர்வர்கள் முன்னிலையில் பிரிக்கப்படாமல் வேறு ஒரு அறையில் பிரிக்கப்பட்டது. இதனால் தேர்வர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளால் தேர்வினை மீண்டும் நடத்த வேண்டும் எனப் பல்வேறு மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குரூப் 2 முதன்மை தேர்வானது பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறி இருந்ததனால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, பின் திரும்ப பெறப்பட்டு மீண்டும் வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததோடு, தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த சில தேர்வர்கள் கைபேசி மூலம் மற்றவர்களிடம் கேட்டும், இணையத்தில் தேடியும் தேர்வு எழுதி உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு முன்கூட்டியும், பல மாணவர்களுக்கு மிக தாமதமாகவும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் தேர்வின் சமநிலை என்பது முற்றாக சீர்குலைந்துள்ளது. ஆகவே தேர்வர்களின் நலன் கருதி ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்துவிட்டு விரைவில் அனைத்து தேர்வர்களுக்கும் மறு தேர்வு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்