tNPSC gave good news to Group - 4 candidates again

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.

அதே சமயம் இந்த தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் தான் குருப் - 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. இதனையடுத்து குரூப் - 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் 11ஆம் தேதி (11.09.2024) அறிவித்திருந்தது. இதன் மூலம் 6ஆயிரத்து 244 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 244லிருந்து, 6 ஆயிரத்து 724 ஆக உயர்ந்தது. இதனால் போட்டித் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

tNPSC gave good news to Group - 4 candidates again

Advertisment

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2 ஆயிரத்து 208 இடங்கள் இன்று (09.10.2024) சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் குரூப் - 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.