டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அனிதா மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்- 2ஏ, கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNPSC EXAM ISSUES CHENNAI PRINCIPAL COURT DISPOSED BAIL AFFIDAVIT

இந்நிலையில், குரூப் 2A தேர்வில் இடைத்தரகருக்கு 11 லட்சம் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்று சாந்தோம் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அனிதாவும், ரூ.12 லட்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்று, பட்டுக்கோட்டையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேசனும் கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

Advertisment

Advertisment

இந்த மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் எனவும் வாதிட்டார்

அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.