Skip to main content

குரூப்- 1 தேர்வு முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 
 

திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பாணை வெளியிட்டது. இதன்படி  2015 நவம்பர் 8- ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்று, முதல் நிலை தேர்வு முடிவுகள் 2016- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டதையும், அதில் 74 பேர் தேர்வு செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். 

TNPSC EXAM GROUP 1 CBI INVESTIGATION NEED TO DMK PARTY HIGH COURT

மேலும், தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதற்கான சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 
 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே செய்திகள் வெளியானதாகவும், குரூப் 1 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி உள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த ஸ்வப்னா என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையம் நிறுவனத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களிலிருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சர் ஆகியோரும் மாணவரிடமிருந்து 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் திமுக தரப்பு மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருவதால், அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்திற்கு எதிராக உரிய விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பதாலும், தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை டிஜிபி கட்டுப்பாட்டிலும், மத்திய குற்றப்பிரிவின் விசாரணை சென்னை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை உரிய முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போவதற்கான சூழ்நிலை இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
 

எனவே இந்த வழக்கை சிபிஐயின் இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழக அரசுக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்