Skip to main content

ஜன.9-ல் நடக்கவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

tNPSC to be held on Jan. 9 Postponement of selection!

 

ஜனவரி 9- ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஜனவரி 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதீத பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோயினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசினால் தற்போது, மாநிலம் முழுவதும் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், 09/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்.16/2021, நாள் 20/10/2021) எழுத்துத் தேர்வு மட்டும் 11/01/2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

தேர்வர்கள் 09/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டினையே உபயோகித்து, 11/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று நடைபெறும் தேர்வினை, நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, அதே தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

மேலும், 08/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை/ திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டப்படி, அதேநாளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

யு.பி.எஸ்.சி. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
UPSC Attention Candidates

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.