Skip to main content

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை சட்டங்கள் தேவை !

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

இந்திய அரசியலமைப்பு சட்டம் 26-11-1949  ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு 26-01-1950  ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை நாம் ஆண்டு தோறும் குடியரசு தினமாக (Republic Day)  கொண்டாடி வருகிறோம். இந்த  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்  பாரத ரத்னா மேதகு சட்டமேதை அண்ணல் பீமாராவ் ராம்ஜீ அம்பேத்கர் ஆவர் . உலகில் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம் நம் இந்திய அரசியலமைப்பு சட்டமாகும். உலகில் மிகப்பெரிய "ஜனநாயக நாடு" என்ற பெருமை இந்தியாவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சட்டங்களை இயற்றி சுமார் 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் அடிப்படை சட்டங்கள் பற்றிய கல்வியறிவு மாணவர்களிடம் சென்றடையவில்லை என்பது தான் உண்மை.

india constution

 தமிழகத்தில் உள்ள துவக்கபள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிகள் வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு  இலவசமாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் " இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டப்புத்தகங்களை " வழங்கினால் மாணவர்களிடம் சட்டக்கல்வி தொடர்பான கல்வியறிவு பெருகும்.இந்த அடிப்படை சட்டப்புத்தகத்தில் "அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009"( Right To Education) , தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 ( Right To Information) , குழந்தை தொழிலாளர் (Child Labour) , சம வேலைக்கு சம ஊதியம் சட்டம் ( Equal Pay Low For Equal Work ) உள்ளிட்ட முக்கிய சட்டங்களை ஒவ்வொரு பருவ பாடத்திட்டத்திலும் தலா 10 அடிப்படை சட்டங்ளை கொண்ட முழு விபர புத்தங்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கினால் ஒவ்வொரு மாணவரும் தனது பள்ளி பருவ இறுதியில் சுமார் 120 சட்டங்கள் தொடர்பான கல்வியறிவை எளிதாக பெறுவர். 

ambedkar constitution

இதனால் தமிழகத்தில் ஊழல் , லஞ்சம் எளிமையாக கட்டுப்படுத்தலாம் ( அல்லது) முற்றிலும் ஒழிக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்கள் மட்டும் சட்டறிவு பெற்றால் அவர்களின் தாய் , தந்தை ,சகோதர் , சகோதரிகள் , நண்பர்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமே சட்டம் பற்றிய கல்வி அறிவை மாணவர்கள் மூலம் கற்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.அடிப்படை சட்டங்களை பெறும் ஒவ்வொரு மாணவர்களாலும் ஊழல் , லஞ்சம் என்ற வார்த்தை நாளுக்கு நாள் சமுதாயத்தில் குறைய தொடங்கும். இதன் விளைவால் விரைவில் லஞ்சம் , ஊழல் இல்லாத இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கும்,  தமிழக மக்களுக்கு போய் சேரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் மாநிலத்தை உதாரணமாக வைத்து மற்ற மாநில அரசுகளும் அவரவர் மாநில பள்ளி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டக்கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்கவும் வாய்ப்பு உண்டு. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவுமே லஞ்சம் , ஊழலற்ற நாடு என்பதை உலகிற்கு காட்டலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் + மாணவர்கள் = " லஞ்சம் மற்றும் ஊழல் வேரோடு ஓழிந்திடும்"

ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரானவர்களாக மாணவர்கள் மாறினால் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். சமுதாயம் வளம் பெரும் , ஏழ்மை வீழும் . அனைத்து தரப்பு மக்களும் சமமான வாழ்க்கை வாழலாம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

பி.சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

'அம்பேத்கர் விரும்பிய ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்'-திருமாவளவன் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
 'The India alliance must win to protect the democracy Ambedkar wanted' - Thirumavalavan speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளில் அங்குள்ள அவரது திருவுருவ சிலைக்கு கூட்டணி கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழக அரசு வகுத்துள்ள சமத்துவம் குறித்த உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி, மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வடக்கு பாளையம், சோழத்தரம், குமாரக்குடி, கானூர், நாச்சியார் பேட்டை, திருமுட்டம், கள்ளிப்பாடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்து பேசிய அவர், 'அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நடப்பது சாதாரண தேர்தல் அல்ல நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் அறப்போர். முதல்வர் ஸ்டாலின், தலைவர் ராகுல் இணைந்து பாரதிய ஜனதா பாசிச அரசு தொடரக்கூடாது வீழ்த்தப்பட வேண்டும் என தேசிய அளவில் அமைக்கப்பட்ட வியூகம் தான் இந்தியா கூட்டணி.  இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இங்கு  40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். சிதம்பரம் தொகுதி உட்பட 40 தொகுதியிலும் முதல்வர் தான் வேட்பாளர்' என பேசினார்.

விசிக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.