tn raj bhavan says Reminds the country of the Emergency

Advertisment

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (06.01.2025) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் ஆளுநர் உரை தொடர்பாக இன்று தமிழகசட்டப்பேரவை கூட்டத்தில் நடந்தவை தொடர்பாக ஆளுநர் மாளிகை, சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக ஆளுநர் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தின் மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத மரியாதை மற்றும் போற்றுதலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர், “தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் பாடி வருகிறார். உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழி, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆளுநர் இந்த புரிதல் உணர்வை முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திலும் தேசிய அளவிலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு தமிழக ஆளுநர் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, அரசியல் சட்டக் கடமைகளைப் பின்பற்றுவது ஆளுநரின் கடமை. இந்திய நாட்டின் பெருமையான தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமையாகும். இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்திற்குரிய விதிமுறைகளின் படி இது அவசியமாகும். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழக சட்டப்பேரவை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.

Advertisment

இன்று, ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமலோ, இசைக்கப்படாமலோ இருந்தபோதும், தமிழக ஆளுநர் அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி, முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவரை தேசிய கீதம் பாடுவதற்கு அல்லது இசைப்பதற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரின் கோரிக்கை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் ஆளுநர் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநர் இந்திய அரசியலமைப்பின் மேன்மையை போற்றவும், அனைத்து அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும் மற்றும் தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் தனது நிலைப்பாட்டில் உறுதிக்கொண்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn raj bhavan says Reminds the country of the Emergency

மேலும் தமிழக அளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.