Skip to main content

‘தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
Tn govt will never allow CM letter to PM

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று  (28-11-2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடி உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.

இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை,  நீர்வளத் துறை அமைச்சர் 3-10-2023 ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த 7-11-2024 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இந்த டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது.  அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம் ஆகும். இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது.

எனவே இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும். மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

Tn govt will never allow CM letter to PM

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் கரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி கரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்