tn govt Pongal gift set Radhakrishnan IAS who gave the happy news 

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் திருவிழாவிற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பொங்கல் (2024) பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

இத்தகைய சூழலில் தான் இந்த பொங்கலுக்கும் (2025) தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “பொங்கல் திருவிழாவையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கான அறிவிப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறிவிக்கக்கூடிய அறிவிப்பாகும். இதற்குக் கூட்டுறவுத் துறை ரீதியாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நடந்து கொண்டுள்ளது. தமிழக முதல்வரின் அறிவிப்பு வந்தவுடன் அதற்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். அதன்படி ஜனவரி 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிக்குள் அதாவது பொங்கலுக்கு நான்கைந்து நாட்கள் முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.