
திருச்செங்கோடு, பழனி, குன்றத்தூர் உட்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, “சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ. 15 கோடிக்கு மேலாக இருக்க வேண்டும். தேர்வு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கு ஆண்டு வருவாய் ரூ. 15 கோடி வரையில் இருக்க வேண்டும். முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ஆண்டு வருவாய் ரூ. 9 கோடி வரையில் இருக்க வேண்டும். 2ஆம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ஆண்டு வருவாய் ரூ. 6 கோடி வரையில் வருவாய் அளவு இருக்க வேண்டும் ”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உடுமலைப்பேட்டை, பழனி, நந்தவரம், கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளைத் தரம் உயர்த்துவதற்குத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. சட்டப்பேரவை வெளியிட்ட அறிவிப்பின் படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாகவும், மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாயை எட்டியுள்ளதால் நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய 3 தேர்வுநிலை நகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
நந்திவரம், கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தேர்வுநிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று மேலும் மாங்காடு, குன்றத்தூர் வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய 2ஆம் நிலை நகராட்சிகள், முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகம் அளித்துள்ளது. இதன் மூலம் திருச்செங்கோடு, பழனி, குன்றத்தூர் உட்பட 11 நகராட்சிகளைத் தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.