/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-sec-art-1_43.jpg)
இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், ‘முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு, பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தப்படும்.
2025 ஆண்டின் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில், தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம் (B - Pharm) அல்லது டி.பார்ம் (D.Pharam) சான்று பெற்றவர்கள் அல்லது சான்றுபெற்றவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்தை வரும் ஜனவரி மாதம் (2025) முதல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)