TN Govt Announcement Govt Honors EVKS Elangovan

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதனையடுத்து சென்னையில் இன்று (15.12.2024) மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று (14.12.2024) இயற்கை எய்தினார். கடந்த 21.12.1948இல் ஈரோட்டில் பிறந்த இவர், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004இல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

இவர், மத்திய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதைத் துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.