Skip to main content

அரிக்கொம்பன் யானை விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்த தமிழக அரசு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

tn government has announced that the elephant will be released in the dense forest

 

கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது.  இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகப் போக்கு காட்டி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்தி இன்று பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றிச்சென்ற வனத்துறை அதிகாரிகள் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடவுள்ளதாகத்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

இதனிடையே தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மே 27 ஆம் தேதி கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்த அரிக்கொம்பன் யானை, விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும். அத்துடன் குழு அமைத்து அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்பதாலேயே, அவை ஊருக்குள் நுழைகின்றன’ எனக் கருத்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்றும், அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதியான முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.