Skip to main content

"ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பி.எஸ்., ஆனால்..." - உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

tn election campaign dmk party udhaya nidhi stalin speech at cuddalore

 

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று (21/12/2020) கடலூர் மஞ்சக்குப்பத்தில் திறந்த வேனில் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.

 

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் காணப்பட்ட எழுச்சி மீண்டும் மக்களிடையே காணப்படுவதால் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது. நிவர், புரெவி என தொடர் புயல், மழை தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் வந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது சென்னையில் தூங்கிக் கொண்டிருந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு பல ஆயிரம் கோடிக்கு தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளதாகத் தொழில்முனைவோர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய அறிகுறிகள் இல்லை. இது குறித்த வெள்ளை அறிக்கை கேட்டபோது, இதுவரை கிடைக்கவில்லை. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரை அ.தி.மு.க.வினருக்கே தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை அதற்கான விடை கிடைக்காமல் புரியாத புதிராகவே உள்ளது. ஜெயலலிதா இறப்பு குறித்து நடத்திய விசாரணைக்கு ஆஜராக அழைத்த போதும் அவர் ஆஜராகவில்லை.

 

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும். அடிமை அதிமுக அரசுக்கும், மத்திய பாசிச பாஜக அரசு ஆட்சிக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும்" என்றார்.

 

பின்னர் கடந்த 2004- ஆம் ஆண்டு சுனாமியால்  தேவனாம்பட்டினத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.