தமிழ்நாட்டில் வதந்திகளை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளை இருப்புக் கரம் கொண்டு அடக்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப. மாணிக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணி செய்துகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தியை பயன்படுத்தி சிலர் எப்படியாவது கலவரத்தை எற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் தேட நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சட்ட ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அது எந்தக் கொம்பனாக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.
மதவாத எதேச்சதிகாரம், வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஒற்றுமை கரங்கள் சேராமல் வெற்றிக் கனியை பறிக்க முடியாது. 2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல; கொள்கை யுத்தம். ஒற்றுமை உருவானால் வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.