Skip to main content

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு! (படங்கள்)

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என். நேரு; மருத்துவம், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியன்; வணிக வரி, பதிவுத்துறை அமைச்சராக பி.மூர்த்தி; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்; இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு; நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

 

பால் வளத்துறை அமைச்சராக சா.மு.நாசரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதனும், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக சி.வி.கணேசனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைச்சராக மதிவேந்தனும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

கூட்டுறவுத்துறை அமைச்சராக ஐ. பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடியும், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலுவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், தொழிற்துறை, தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக எஸ். ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சராக முத்துசாமியும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பெரியகருப்பனும், ஊரக தொழில்துறை தா.மோ. அன்பரசனும், செய்தித்துறை அமைச்சராக சாமிநாதனும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை அமைச்சராக கீதா ஜீவனும், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனும், வனத்துறை அமைச்சராக கா. ராமச்சந்திரனும், உணவுத்துறை அமைச்சராக சக்ரபாணியும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும், கைத்தறித்துறை அமைச்சராக ஆர். காந்தியும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

 

பதவியேற்பு விழாவில் வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், தனபால் மற்றும் பாஜக சார்பில் இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மு.க. அழகிரி மகன் தயாநிதி அழகிரி, ஐ- பேக்கின் பிரசாந்த் கிஷோர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின், சபரீசன் மற்றும் செந்தாமரை, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

 

இதனிடையே, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.