ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்!

10:47 AM Jul 23, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருக்கோவிலூரில் கரோனாவால் உயிரிழந்த உடலை த.மு.மு.க.வினர் நல்லடக்கம் செய்தது, மக்களை நெகிழச் செய்துள்ளது.

ஊரடங்கு தொடங்கிய காலத்தில் மக்கள் பலர் இஸ்லாமியர்கள் தான் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று பொய்ப் பரப்புரையில் நகர்த்தப்பட்டு, இஸ்லாமியர்கள் மீது வெறுப்புடன் நடந்துகொண்டிருந்தனர். ஆனால் கரோனாவிற்குப் போலியான மதச்சாயம் பூச முயன்றவர்கள் தற்போது இஸ்லாமியர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலருகே உறவினர்கள் கூட வரத் தயங்கும் சூழலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தாமாய் முன் வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மதவேற்றுமை கடந்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பண்ணைவயல் இளங்கோவின் உறவினர் கருணாநிதி தஞ்சாவூரில் கரோனா தொற்று காரணமாக மரணமடைந்தபோது அவர்களின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவரின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்தனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க.) தொண்டர்கள்.

திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டை நசீர் என்பவர் நேற்று கரோனா தொற்றால் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் த.மு.மு.க. நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அவரை நல்லடக்கம் செய்ய உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். உடனடியாக இது சம்பந்தமாக த.மு.மு.க. சார்பாகக் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. திருக்கோவிலூர் வட்டாட்சியர், திருக்கோவிலூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. இன்று 22/07/2020 மதியம் ஒரு மணி அளவில் அவரது உடல் திருக்கோவிலூர் முஸ்லிம் அடக்கத்தலத்தில் முறையாக அடக்கம் செய்யப்பட்டது.

இதில் ஈடுபட்ட த.மு.மு.க. பேரிடர் மீட்புக் குழுவினரின் பணியைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் நெகழ்ந்து பாராட்டினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT