Advertisment

"ஓ.என்.ஜி.சி. கிணறு அமைக்க கால நீட்டிப்பு செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்"- பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!

tiruvarur district ongc union government

Advertisment

ஓ.என்.ஜி.சி. கிணறு அமைக்கும் காலத்தை 2023- ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யும் மத்திய அரசு அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் காவிரி காப்பாளர் என்கிற பட்டம் வழங்கி பாராட்டு விழாவும் நடந்தது. இந்நிலையில் மத்திய அரசு 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா என்ற பேரில் விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமலேயே மாசுகட்டுப்பாட்டு துறை அனுமதியின்றியும், மாநில அரசுகளின் ஒப்புதலின்றியும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பேரழிவு திட்டங்களை நிறைவேற்ற மாபெரும் சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

இந்தநிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பெரியகுடி ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு தோண்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள கிணறு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "கடந்த 2013- ல் திருவாரூர் மாவட்டம், பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் போது கட்டுகடங்காத வாயு வெடித்து குழாயை உடைத்துக் கொண்டு வெளியேறியது. இதனையறிந்த விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து தீயை அணைத்து கிணறு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் இக்கிணற்றை சுற்றி இருள்நீக்கி,விக்கிரபாண்டியம், ஆலாத்தூர், மாவட்டக்குடி, குலமாணிக்கம், பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் கிராமங்களில் 8 கிணறுகள் புதிதாக அமைக்க மத்திய அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இது குறித்து 2014-ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனுமதி வழங்க கூடாது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டதோடு நிலம் கொடா இயக்கமும் துவங்கப்பட்டு விவசாயிகள் நிலம் அளிக்க மாட்டோம் என உறுதியேற்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020- ல் ஜனவரி மாதம் அறிவித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேளண்மை துறை சார்பில் தனித்தனியே அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு மேற்கண்ட 8 கிணறுகளை மீண்டும் தோண்டுவதற்கு 2023- ஆம் ஆண்டு வரை கால நீட்டிப்பு வழங்க ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை மத்திய அரசு உடன் கைவிட வலியுறுத்துகிறோம். மேலும் தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த அவசர கால நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுகிறோம்" என்றார்.

Farmers ongc p.r.pandiyan Tiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe