
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவராக 2023 ஆம் ஆண்டு ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். அதில் ஜீவானந்தம் என்பவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து பாஜகவின் ஆலயங்கள் பிரிவு மாநில துணைத்தலைவரான வழக்கறிஞர் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதில் அண்ணாமலையார் கோவிலில் வாடகைதாரராக இருப்பவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அறநிலையத் துறை விதிகளுக்கு முரணானது. இவர் அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கிறார். அதனால் இவரை குழு தலைவராக தேர்வு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு விதிமுறைகளுக்கு முரணாகவும் நியமனம் செய்யப்பட்டது உறுதியாகிறது. அதனால் ஜீவானந்தத்தின் தலைவர் பதவி ரத்து செய்யப்படுகிறது எனத் தீர்ப்பு வழங்கினர். இதனைக் கோவில் பணியாளர்களும் குருக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி உள்ளனர். இது மாவட்ட திமுகவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.