Skip to main content

கரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

 

ஊரடங்கு காலத்தில் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, விதிகளை மீறி கட்சியினருடன் சேர்ந்து மாபெரும் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவில் திருவண்ணாமலை தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச பிரச்சனையால் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் கைதாகி சிறை சென்றது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுயிருந்தவருக்கு ஜெ. மறைவுக்கு பிறகு அடுத்தடுத்து கட்சியில் பதவிகள் வாங்கி வந்தார். ஆனாலும் அவரின் கனவான மா.செ பதவியில்தான் மீண்டும் அமரவேண்டும் என நினைத்தார். இரண்டு வாரத்துக்கு முன்பு மா.செ.வாக அக்ரி நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை பெரிய அளவில் கொண்டாடவேண்டும் என முடிவு செய்தார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.

 

அதன்படி ஆகஸ்ட் 8ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேவூர்.ராமச்சந்திரன் திருவண்ணாமலை நகருக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவரோடு சேர்ந்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளை மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தார்.

 

இதற்காக திருவண்ணாமலை, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டினார்.  இருநூறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 50க்கும் அதிகமான கார்களில் அக்ரியும் அவரது ஆதரவாளர்களும், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தனர். இதற்காக அதிமுகவினர் நடத்திய ஊர்வலம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, 500க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் கட்சி கொடி கட்டிக்கொண்டு, நகரத்தில் ஊர்வலம் வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கரோனா கால ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, அரசாங்கத்தின் விதிகளை மீறி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 3 மணி நேரம் திருவண்ணாமலை நகரத்தை வலம் வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தியதை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.

 

தற்போது இதுதொடர்பாக திமுக உட்பட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். சமூக வளைதளங்களில் திமுகவினர், நலத்திட்ட உதவிகள் வழங்கிய நாங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ், வெளிப்படையாக விதிகளை மீறி ஊர்வலம் நடத்திய அமைச்சர், அதிமுக மா.செ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமான முதல் 5 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. அப்படிப்பட்ட மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுக, இப்படி வெளிப்படையாக 500 பேர்களுக்கு மேலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை திரட்டி ஊர்வலம் நடத்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஆளும்கட்சி என்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது. இவர்களால் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விதிகளை அப்பட்டமாக மீறி ஊர்வலம் நடத்திய அதிமுகவினர் மீதும், அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் மீதும், மா.செ. மீதும் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.