ADVERTISEMENT

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி; பெட்ரோல் ஊற்றி கொலை செய்த காதலன்

05:35 PM Jan 07, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியின் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு அருகே உள்ளது பனப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கடந்த 3 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இளம்பெண் ஒருவர் உடலில் தீக்காயங்களுடன் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாா். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளம்பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே அந்த பெண்ணைக் கொளுத்திவிட்டு தனது டூவீலரில் தப்ப முயன்ற இளைஞர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதன்பிறகு, அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், டிஎஸ்பி செளனியா நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், தீ வைக்கப்பட்ட இளம்பெண் பூஜா வடமாநிலத்தைச் சேர்ந்தவர். 19 வயதான இவர், ராயர்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியபடி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் ராயர்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இதையடுத்து, பூஜா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி லோகேஷை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, லோகேஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, பூஜா தொடர்ந்து வற்புறுத்தினார் எனச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில், கடும் கோபத்திற்கு ஆளான லோகேஷ், பூஜாவை கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, லோகேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் இருந்த பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளார். இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளம்பெண் பூஜா கடந்த 4 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். பின்னர், பூஜாவின் மரணத்திற்கு காரணமான லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தான் காதலித்த பெண்ணை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய வாலிபரின் செயல் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT