Skip to main content

பறிமுதல் செய்த லாரியின் பரிதாப நிலை; நூலிழையில் உயிர்தப்பிய போலீஸ்!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

tirupur lorry accident video goes viral

 

"முதல்ல பணத்தை கட்டிட்டு, அப்புறம் உன்னோட வண்டிய எடுத்துட்டு போ" என டிரைவரின் வாகனத்தை பிடுங்கி வந்த பைனான்ஸ் ஊழியர் ஒருவர், அந்த லாரியை தலைக்குப்புற கவிழ்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிக்கு அருகே உள்ளது மங்கரசுவளையபாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் அவிநாசி - திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே சமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரேசன் வறுமையில் வாடிவந்த நேரத்தில் சிவசக்தி எனும் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த பணத்தையும் சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று ஆட்டையம்பாளையம் அருகில் தனது லாரியை நிறுத்திய குமரேசன், அங்கிருக்கும் கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசக்தி ஃபைனான்ஸில் பணிபுரியும் மேனேஜர் வீரமணி, பைனான்ஸ் ஊழியர்கள் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விரக்தியடைந்த பைனான்ஸ் ஊழியர் முருகேஷ் என்பவர் குமரேசனின் லாரியை எடுத்துக்கொண்டு, "முதல்ல பணத்தை கட்டிட்டு, அப்புறம் உன்னோட வண்டிய எடுத்துட்டு போ" எனக் கூறியபடி அந்த லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டு கோவை ரோட்டில் அவிநாசி நோக்கி வந்துள்ளார்.

 

அப்போது, அந்த லாரியை அதிவேகமாக ஓட்டி வந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அங்கிருந்த டிவைடரை உடைத்துக்கொண்டு வாகனங்கள் மீது லாரி பயங்கரமாக மோதியது. அதுமட்டுமின்றி, சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த போலீசாரின் ஜீப் மீதும் மோதி தடம்புரண்டுள்ளது. அந்த சமயம், லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைக் கண்ட போக்குவரத்து போலீசாரும் பொதுமக்களுக்கும் அங்கிருந்து நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். இதையடுத்து, இந்த விபத்து சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.