Skip to main content

உழவன் மகன் எடப்பாடி ஆட்சியிலே, உழவன் கையில் சட்டியடா... வேதனையுடன் குமுறும் விவசாயிகள் 

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

தமிழ்நாடு பவர் கிரிட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் இந்த உயர்மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்கள் வழியாக அமைத்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

tirupur



மாநில முதல்வர் எடப்பாடி வரை நேரில் சென்று மனு கொடுத்து விட்டார்கள். ஆனாலும் உயர் மின் கோபுரங்கள் விவசாய விளைநிலங்கள் வழியாக அமைப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விவசாயிகள் தொடர்ந்து தங்களது விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதை தடுத்தும் பார்த்தார்கள். ஆனால் வலுக்கட்டாயமாக போலீசை வைத்து விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு ஒவ்வொரு உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய குடும்பத்தைச் சேர்நத பெண்கள் கையில் சட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

"பறிக்காதே... பறிக்காதே... விளை நிலங்களை பறிக்காதே.. உடனே நிறுத்து... உடனே நிறுத்து... உயர் மின் கோபுரம் அமைப்பதை உடனே நிறுத்து... உடனே நிறுத்து... நான் ஒரு விவசாயி மகன் என்று கூறும் முதல்வர் எடப்பாடியே... உழவன் மகன் ஆட்சியிலேயே... உழவன் கையில் திருவோடு.... வெட்கக்கேடு... வெட்கக்கேடு எடப்பாடியே உன் ஆட்சிக்கு வெட்கக்கேடு... வெட்கக்கேடு...'' என கோஷமிட்டதோடு ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

உயர் மின் கோபுரத்தால் பறிபோகும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தற்போதைய மார்கெட் மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்தனர். விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.