Skip to main content

காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

tiruppur veerapandi young married women inicent 

 

திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவரது மனைவி கௌதமி (வயது 22). இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனது திருமணம் குறித்து மணிகண்டன் தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணிகண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பவித்ரா இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில், மணிகண்டனும் கவுதமியும் பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.

 

இதனால் மனமுடைந்த கெளதமி பவித்ராவின் வீட்டில் உள்ள பாத்ரூமுக்குள் சென்று தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். வெகுநேரமாகியும் கெளதமி வெளியில் வராததால் பாத்ரூம் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கெளதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கெளதமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கெளதமியின் சகோதரர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்