திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் எந்தவித கடைகளும் திறக்கப்படவில்லை, மீறி திறக்கப்படும் கடைகளுக்கு வருவாய்த்துறை சீல் வைக்கும் பணியை செய்கின்றது. இதனால் பொதுமக்கள் மிரட்சியில் உள்ளனர். இந்நிலையில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கால்நடைகள் அடுத்தடுத்து இறக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏப்ரல் 28ந்தேதி வாணியம்பாடி பகுதியில் 2 கால்நடைகள் இறந்துள்ளன. அதனை தொடர்ந்து ஏப்ரல் 29ந்தேதி காலை ஆம்பூர் அடுத்த கரும்பூர், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அடுத்தடுத்து திடீரென 5 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் கால்நடைகள் திடீரென இறந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கால்நடைகளுக்கும் கரோனா தொற்றுநோயா? அல்லது வேறு ஏதாவது நோயா எனத்தெரியாமல் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.