Skip to main content

ரெட் அலர்ட் பகுதியில் இயங்கிய தோல் தொழிற்சாலை!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ளது கிளாசிக் தோல் தொழிற்சாலை. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் எதுவும் திறக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில் கிளாசிக் தோல் தொழிற்சாலை, ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து தோல்களை இறக்குமதி செய்து, பணியாளர்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்த தகவல் வாணியம்பாடி கோட்டாட்சியர் சுப்பிரமணியத்துக்குத் தகவல் சென்றது.
 

அந்தத் தகவலைத் தொடர்ந்து அவர்கள் செல்ல வெளிப்பக்கம் பூட்டிவிட்டு உள்பக்கமாக தொழிற்சாலை இயங்கியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதில் அதிர்ச்சியான அதிகாரிகள், உடனடியாக உள்ளிருந்த பணியாளர்கள் 29 பேரை வெளியே அனுப்பிவிட்டு அந்தத் தொழிற்சாலைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா நோயாளிகள் இருந்ததால் அது ரெட் அலர்ட் மாவட்டமாக இருந்தது. மருத்துவர்களின் சிகிச்சை கண்காணிப்பில் அவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்து வீடு சென்றனர். இருந்தும் பெரிய கட்டுப்பாடுகள் விதித்து நோய்ப் பரவலை மாவட்ட நிர்வாகம் தடுத்து வரும் நிலையில் விதிகளை மீறி ஒரு நிறுவனம் பணியாளர்களை வரவைத்து வேலை வாங்கியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

http://onelink.to/nknapp


அங்குப் பணியாற்றிய 29 பேருக்கும் கோவிட் 19 டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள். அதோடு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!