tiruppattur district vaniyambadi Municipal Commissioner

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி கடைகள் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யநகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மே 12- ஆம் தேதி ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகளின்பழங்களைக் கீழே தூக்கிப்போட்டார், பழ வண்டிகளை அப்படியே கீழே தள்ளிவிட்டார், பழத் தட்டுகளை உதைத்துத் தள்ளினார் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்.

Advertisment

Advertisment

இதனை வியாபாரிகளால் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால் அவரின் செயல்கள் வீடியோவாக வெளியாகி அவரின் செயல்கள் கண்டனத்துக்கு உள்ளாகின. உயரதிகாரிகள் இதுக்குறித்து நகராட்சி ஆணையரிடம் கடுமையாகக் கேள்விகளை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் செய்தியாளரைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது; "இரண்டு நாட்களாக சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்தும், அரசு விதிகளைப் பின்பற்றாமல் அதே இடத்தில் கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் கடைகளை அப்புறப்படுத்த இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கரோனா பரவியது. இது போன்று இங்கும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே அப்படிச் செய்தேன்.

வாணியம்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் சென்னையில் இருந்து வந்தவர்களால் கரோனா நோய்ப் பரவி வருகிறது. சென்னை போல் வாணியம்பாடியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காகவும், மக்களின் நலன் கருதியும்இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை மக்கள் தவறாக எடுக்கும்பட்சத்தில் இந்தச் செயலுக்கு வருத்தம்" தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் மே 13- ஆம் தேதி காலை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வியபாரிகளிடம் நேரில் சென்று நேற்று (12/05/2020) நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக நிவாரணத் தொகையை வழங்கினர்.

பின்னர் ஆணையாளர் சுசில் தாமஸ்க்கு, சென்னை நகராட்சி நிர்வாகச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேரடி விசாரணைக்கு உடனடியாகச் சென்னைக்குவரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.இதையடுத்து அவர் நேரில் ஆஜரானார்.