திருப்பத்தூர் மாவட்டம், சாலை நகரில், கிறிஸ்துவ அமைப்பான எம்.சி.ஏ நிர்வாகத்தின் கீழ் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதனுடைய செயலாளராக மோசஸ் என்பவர் உள்ளார். இவர் இந்த விடுதியின் அருகாமையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விடுதியில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, 29 வயதான பெண் ஒருவர் தங்கியிருந்துள்ளார். அவர், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தந்துள்ள புகாரில், தினமும் நள்ளிரவில் செல்ஃபோனில் அழைத்து, ஆபாசமாகப் பேசுகிறார், தன்னுடைய அறைக்கு அழைத்து, இரட்டை அர்த்தங்களில் பாலியல் வக்கிரத்தோடு பேசுகிறார் எனக் கடந்த நவம்பர் 25ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரை திருப்பத்தூர் தாலுக்கா அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார் காவல்துறை கண்காணிப்பாளர். அங்கு, அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். சில ஆதாரங்களையும் அவர் தந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 9ஆம் தேதி, மோசஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர் மீது வழக்குப் பதிவு செய்த தகவலை, தெரிந்துகொண்டு மோசஸ் தலைமறைவாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை தேடும் வேலையில், காவல்துறை ஈடுபட்டுள்ளது.
விடுதிக்கு வந்து தங்கியுள்ள பெண்களில் சிலருக்கு, தன் ஆசைக்கு இணங்க வேண்டும் எனத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் தருவதாகக் கூறப்படுகிறது. அதில் துணிந்து ஒரு பெண் புகார் தந்துள்ளார் என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.