Tirupattur district alleary village family problem one passes away

திருப்பத்தூர் மாவட்டம், அல்லேரி கிராமத்தைச் சேர்ந்த தனது மாமன் மகள் ரம்யாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் 30 வயதான குமரன். 2014ல் ரம்யாவை அடித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை குமரனை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த குமரன் மீது கோபத்தில் இருந்துள்ளனர் ரம்யா குடும்பத்தார்.

Advertisment

இதனால், அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி ஏலகிரி கிராமத்தில் வந்து தங்கியுள்ளார் குமரன். அஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரம்யா கொலை வழக்கு திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி ஏலகிரி கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனால் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது, பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். இந்நிலையில் குமரன் வீட்டுக்குவந்த ஒரு இளைஞர், குமரனை சரமாரியாக வெட்டி வீசிவிட்டுச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அஞ்சலி, தனது கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அழுதுள்ளார். சாலையில் சென்றவர்களை கத்தி அழைக்க அவர்கள் வந்து வெட்டுப்பட்ட குமரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குமரன் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாருக்குச் சென்றதும் அவர், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். குற்றவாளியைப் பிடிக்க டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சில மணி நேரங்களிலேயே ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குமரனின் முதல் மனைவியான கொலை செய்யப்பட்ட ரம்யாவின் தம்பி ராஜீ எனக் கூறப்படுகிறது. தனது அக்காவை கொலை செய்ததற்கு பழிவாங்க முடிவு செய்ததாகவும், நீதிமன்றம் விடுதலை செய்துவிடும் என நினைத்து வெட்டி கொலை செய்ததாகவும் கூறுகிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.