ADVERTISEMENT

அரிவாளால் சரமாரியாக வெட்டி தந்தையை கொன்ற மகன்கள்...!

11:44 AM Nov 02, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் சொத்து தகராறில் இருமகன்கள் இணைந்து தந்தையை வெட்டி கொன்றுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் ரோடு ஆசாத் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 65). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு கென்னடி (40), ராஜா (36), சேகர் (32) ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் தனது இரண்டே கால் சென்ட் காலி மனையை மூத்த மகன் கென்னடிக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற மகன்களான ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களுக்கும் சொத்தில் பங்கு தருமாறு கூறி, தந்தை காமராஜ், அண்ணன் கென்னடி ஆகியோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, சைக்கிள் கடையின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு காமராஜ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் மகன்கள் இருதயராஜ், சேகர் ஆகியோர் வந்து தூங்கிக் கொண்டிருந்த காமராஜை எழுப்பி தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்திற்கு மேல் தகராறு முற்றவே அவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர்களது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

தந்தையை கொன்றும் ஆத்திரம் தீராத இருவரும், அண்ணன் கென்னடியை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ரத்தம் சொட்டும் அரிவாளுடன் தம்பிகள் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கென்னடி தப்பி ஓடினார். அவரை இருவரும் விரட்டினர். தலைதெறிக்க ஓடியதில் தவறி விழுந்த கென்னடிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அதற்குள் அக்கம் பக்கத்தினர் திரண்டதால் இருதயராஜூம், சேகரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த கென்னடியை மீட்டு சிகிச்சைக்காக பணகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இறந்த காமராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜா, சேகர் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT