Skip to main content

திருமுருகன் காந்தி கைது : தமிழ்நாடு அரசின் சனநாயகப் பறிப்பு தீவிரமாகிறது! பெ. மணியரசன்

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
g

 

திருமுருகன் காந்தி கைதுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் விடுத்துள்ள கண்டனம்!


‘’மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை நேற்று (09.08.2018) பெங்களுரு வானூர்தி நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து, சிறையிலடைக்க சென்னை கொண்டு வந்திருப்பது முற்றிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்களுக்கும் எதிரான செயலாகும்! இச்செயல் சனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழின உரிமைகளுக்கும் எதிரானது!     

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறப்போராட்டம் நடத்திய மக்கள் மீது மனிதவேட்டை நடத்துவது போல், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக் கொன்றும், சற்றொப்ப 80 பேருக்கு படுகாயங்களை உண்டாக்கியும் தமிழ்நாடு காவல்துறை வன்முறை வெறியாட்டம் நடத்தியது. இந்த மனித உரிமை மீறலையும், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தோரைக் கைது செய்த தமிழ்நாடு அரசின் சனநாயக விரோதப் போக்கையும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தோழர் திருமுருகன் காந்தி எடுத்துக்கூறி, நீதிகேட்டதுதான் அவர் செய்த “குற்றம்” ! 

ஐ.நா. மன்றத்தின் சட்டதிட்டங்கள்படி ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதற்கு மனித உரிமை மன்றம் வாய்ப்பளிக்கிறது. ஐ.நா. மன்றத்தின் இச்சட்டம் இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சட்டமாகும். இச்சட்டத்தின்படிதான் திருமுருகன் காந்தி பேசியிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மேற்படி உரையை மே பதினேழு இயக்கத்தினர் தங்களின் முகநூலில் வெளியிட்டார்கள் என்றும், அதைப் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது. 

 

அண்ணா தி.மு.க.வினர் புகார் அளித்திருப்பதால், திருமுருகன் காந்தி பேச்சு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் என்று கருதி, அவரைக் கைது செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். திருமுருகன் காந்தி பேச்சால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று கூறும் காரணம், எவ்வளவு போலியானது – புனைவானது என்பது எல்லோருக்கும் புரியும்! அவர் ஐ.நா. அவையில் பேசிவிட்டு வந்த, இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அவரால் எந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழவில்லை! இது ஒரு அடிப்படையற்ற கற்பனை என்பதற்கு இதுவே சான்று! 

 

தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டால், யார் வேண்டுமானால் யார் மீதும் பொய் புகார் கொடுக்கலாம், அந்த அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யும் என்ற நிலை ஏற்படும்! 

தமிழ்நாடு அரசு நடுவண் அரசின் அறிவுறுத்தலோடு தொடர்ந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி கைது! இச்செயல்களால் தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். 

 

சனநாயக உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் குடிமை உரிமைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. பணயக் கைதிகள் போல், மக்களை தன் ஏவலுக்கும் கண்காணிப்புக்கும் கட்டுப்பட்டவர்களாக வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு முனைகிறது. 

எனவே, மக்கள் உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் சனநாயக உரிமைகளை மீட்கவும், தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் திரள் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது. 

 

தமிழ்நாடு அரசு, தனது சனநாயக விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும்,  திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ’’

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

காட்டுமிராண்டிகளா இவர்கள்? தொடைநடுங்கிகள்! - விளாசும் திருமுருகன் காந்தி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Thirumurugan Gandhi Interview

 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம். 

 

தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. 

 

வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை. 

 

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...