டிராபிக்ராமசாமி வழக்கு: ஆட்சியர் ரோகிணி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோத பேனர்களை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களே ஊக்குவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில் கடந்த 30ம்தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு சட்டவிரோதமாக 200க்கும் மேற்பட்ட பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டது என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் "பேனர்கள் அமைக்க எந்த அனுமதியும் பெறவில்லை மாறாக இந்த பேனர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பும் கொடுத்தனர். மேலும் பேனர் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அவை மீறப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக அமைக்கப்படும் பேனர்களை தமிழக முதல்வரும், அமைச்சர்களும் ஊக்கப்படுத்துகின்றனர்.
மேலும் முதல்வர் விழாவிலேயே இதுபோன்ற பேனர்கள் வைக்கப்படுவதால் காவல்துறையினரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர். எனவே இதுபோன்று சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என கேரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பனர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
- சி.ஜீவா பாரதி