Skip to main content

நள்ளிரவில் சூர்யாதேவி கொடுத்த அலப்பறை.. கதவை உடைத்து உள்ளே புகுந்த போலீஸ்..

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

TikTok fame Surya Devi sent video to commissioner police investigation

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் மகளுடன் வசிப்பவர் சூர்யாதேவி (35), டிக்டாக் பிரபலம். குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகளை மரியாதையில்லாமல் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சைக்குள் சிக்குபவர். 

 

சூர்யாதேவி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு டிக்டாக் செய்யும் நபரான, மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்டு, அவரை செருப்பால் அடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார். இது தொடர்பாக சூர்யாதேவி மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். 

 

இது தொடர்பாக அவரிடம் விசாரிக்க மதுரை போலீசார் சில நாட்களுக்கு முன் மணப்பாறை வந்திருந்தனர். அப்போது சூர்யாதேவியின் வீடு பூட்டிக் கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் (24.08.2021) நள்ளிரவு மதுரை போலீஸ் கமிஷனருக்குத் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை சூர்யாதேவி அனுப்பி அதிர்ச்சியைக் கொடுத்தார். 

 

இதுகுறித்து மதுரை மாநகரப் போலீசார், மணப்பாறை போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மணப்பாறை போலீசார் நள்ளிரவு 12 மணியளவில் காந்தி நகரில் உள்ள சூர்யாதேவி வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ‌அதிர்ச்சியடைந்த போலீசார், மணப்பாறை தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அங்கு மின்விசிறியில் வேட்டியை தூக்குமாட்டிக்கொள்வதுபோல் கட்டிவிட்டு, சூர்யாதேவி தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை எழுப்பி அறிவுரை கூறிய போலீசார், சூர்யாதேவியையும் அவரது மகளையும் பக்கத்து தெருவில் இருந்த அவரது தாத்தா சாமியிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்