Skip to main content

தமிழக கேரள எல்லையில் புலி நடமாட்டம்; பசுவை அடித்துத் தூக்கிச்சென்று ஆற்றில் வீசிய கொடூரம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Tiger movement in Tamil Nadu Kerala border

 

கோடை வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. வஞ்சகமில்லாமல் சென்சுரியையும் தாண்டிய அனல் கொதிக்கிறது. இதற்கு மலை வனப்பகுதிகளும் விதிவிலக்கல்ல. உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் தான் அந்தப் பயங்கரம். தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டிய பகுதியில் கேரள எல்லை துவங்குகிறது. எல்லைப்புறம் தாண்டிய கேரளாவின் ஆரியங்காவு நகரின் அரேக்கர் மலைவனப்பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா. தனது வீட்டின் தொழுவத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்புறமுள்ள தொழுவத்தில் மூன்று பசுக்களையும் கட்டி வைத்திருந்தார்.

 

நேற்று அதிகாலை 3 மணியளவில் தொழுவத்தின் மாடுகள் கலைச்சலில் கத்துகிற சத்தம் கேட்கவே அதனை யாரும் கவனிக்கவில்லையாம். காலையில் தங்கையா வழக்கம் போல் எழுந்து தொழுவத்தைப் பார்த்த போது இரண்டு பசுக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கிடந்தது கண்டு பதைபதைத்துப் போனார். மற்றொரு மாட்டை காணவில்லை. அந்த மாட்டை புலி தாக்கிக் கொன்று இழுத்துச் சென்றது அந்தப் பகுதியின் சி.சி.டிவி. காமிராவில் பதிவாகியது தெரியவந்திருக்கிறது. மேலும் அந்த மாட்டை அருகிலுள்ள ஆற்றுப்படுகையில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறது. தங்கையா இது குறித்து வனத்துறையினருக்குத் தெரிவிக்க, புரபேஷனரி ரேஞ்ச் ஆபீசர் விபின் சந்திரன், கடமான்பாறை துணை ரேஞ்சர் ஸ்ரீஜித், முதுநிலை வன அலுவலர் ஜஸ்டின் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன் சம்பவ இடம் வந்த கிராம பஞ்சாயத்து தலைவரான சுஜா தாமசும் பார்வையிட்டு சூழலைக் கண்டறிந்திருக்கிறார். புலியின் நடமாட்டம் என்பதால் கேரள சிறப்பு வனக்குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

 

தற்போது கோடை வெயில் துவங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்திருக்கலாம். இப்பகுதியில் புலி நடமாடுவதால் தேசிய புலிகள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள். மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து 2 பசுக்களைக் கொடூரமாகத் தாக்கியதுடன் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றதால் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயிருக்கிறார்கள் ஆரியங்காவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.