Skip to main content

பெண் பயணியை அவமதித்த டிக்கெட் பரிசோதகர்; தட்டிக்கேட்ட ரயில்வே காவலர் இடமாற்றம்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

கடந்த ஜூலை 22ம் தேதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தாமாக கோவை வந்துள்ளார். தனது பணியை முடித்து விட்டு அன்று மதியமே தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார் மாரியம்மாள்.

அப்போது ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த பத்மகுமார் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு மாரியம்மாள் டிக்கெட்டானது கணவரிடம் உள்ளது என்றும், அவர் முன்னே உள்ள இரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

 

railway

 

இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியுள்ளார். மாரியம்மாள் டிக்கெட் பரிசோதகரிடம் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன் என சொன்னபோது பத்மகுமார் அவரை அநாகரீக வார்த்தையில் பேசி அவர் கொண்டு வந்த பாத்திரங்களை எட்டி உதைத்ததாக தெரிய வருகிறது.

இதைக் கண்ட பணியில் இருந்த ஆர்பிஎப் தலைமை காவலர் வீரமுத்து பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இது தவறான செயல் எனவும், இது நமது பணியல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பத்மகுமார் எனக்கு அறிவுரை சொல்கிறாயா என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரயில்வே காவலருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

railway


இந்த காட்சிகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது. ஆனால் பெண் பயணி என்றுகூட பாராமல் பொதுஇடத்தில் மனிதநேயமற்ற முறையில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக டிக்கெட் பரிசோதகரின் செயல்பாட்டை தட்டிக்கேட்ட தலைமை காவலர் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

railway


பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர் வீரமுத்து பணியில் அமர்ந்தது முதல் 25 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து உள்ளார். அதேபோல ரயில் நிலையத்தில் கீழே கிடந்த 12,500 ரூபாய் ,1500 ரூபாய் என விலை உயர்ந்த 9 செல்போன்கள், சுமார் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் மதிப்புடைய பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து நற்பெயர் பெற்றுள்ளார்.

இப்படி ரயில்வேதுறைக்கும், காவல்துறைக்கும் நற்பெயர் எடுத்துக் கொடுத்து வந்த இந்த காவலர் மனிதநேயத்தோடு அநியாயத்தை தட்டிக் கேட்டதால் அவருக்கு ரயில்வேதுறை மறைமுகமாக மதுரை டிவிசனுக்கு இடமாற்றத்தை பரிசாக வழங்கி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.