Skip to main content

இடி, மின்னல், அடை மழை.. தத்தளிக்கும் துத்துக்குடி! 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Thunder, lightning, torrential rain.

 

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்துவருகிறது. அதன்படி தென் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகன மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதியான, தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் நெல்லைப் பகுதியிலும் நேற்று காலையிலிருந்தே வெளுத்து வாங்கியிருக்கிறது. திருச்செந்தூரில் மட்டும் 3 மணி நேர கனமழையின் விளைவாய் வெள்ள நீர் நகரச் சாலைகளில் பெருக்கெடுத்திருக்கிறது. குறுகிய நேரத்தில் பெய்த கனமழையின் அளவு திருச்செந்தூரில் 24.06.செ.மீ., காயல்பட்டினத்தில் 30. செ.மீ., தூத்துக்குடியில் 26.04 செ.மீ. என பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக தூத்துக்குடியின் அரசு மருத்துவமனைக்குள்ளும் புகுந்த வெள்ள நீரால் பணியாளர்கள், நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டதுடன் அருகிலுள்ள நீதிமன்றப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

 

தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள், அதிகாரிகளால் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ள நீர் பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சிக் கமிஷ்னர் சாருஸ்ரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவு படுத்தினர். 

 

Thunder, lightning, torrential rain.

 

திருச்செந்தூரின் செந்திலாண்டவர் ஆலயத்தைக் கிட்டத்தட்ட மழை வெள்ள நீர் முற்றுகையிட்டது. சண்முக விலாசம், ஆலயத்தின் வெளி மற்றும் உட்பிரகாரம் போன்றவைகளில் வெள்ள நீர் ஓடியது. கோயிலின் உட்பிரகாரப் பகுதியில் உள்ள மடை அடைப்பினால் வெள்ள நீர் வெளியே செல்ல முடியாமல் முழங்கால் அளவு தேங்கியதால், ஆலய செயற்பொறியாளர் அழகர்சாமி, மேலாளர் சிவநாதன், பி.ஆர்.ஓ. மாரிமுத்து ஆகியோர் உடனடியாக ஜே.சி.பி.யை வரவழைத்து அடைக்கப்பட்ட மடையைச் சீர் செய்து வெள்ள நீரை வெளியேற்றினர். இதன் காரணமாக ஆலயத்தரிசனத்திற்கு பக்தர்கள் வரமுடியாமல் சிரமப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதி, ஆலயச் சாலைகள் வெள்ளக் காடாயின.

 

மூன்று மணி நேரக் கனமழையால் கடற்கரைப் பகுதியான காயல்பட்டினம் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. நகரை ஒட்டிய அருணாசலபுரம் செல்லும் பாதை வெள்ளம் காரணமாக அங்குள்ள தரைப்பாலம் அடைபட்டதால் திசைமாறிய வெள்ள நீர், அருகிலுள்ள 20 குடியிருப்பு வீடுகளில் புகுந்ததால் அந்த வீடுகளின் மக்கள் பல் நோக்குப் புகலிடம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.

 

Thunder, lightning, torrential rain.

 

இடியும் மின்னலுமாய் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது நேரத்தில் மாவட்டத்தின் நாங்குநேரிப் பகுதியின் முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் என்பவர் தன்னுடைய 100 செம்மறி ஆடுகளை அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அது சமயம் கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்னல் வெட்டுத் தாக்கியதின் காரணமாக மேய்ச்சலிலிருந்த 20 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ஆகும் என்கிறார்கள்.

 

திருச்செந்தூரில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட கனிமொழி எம்.பி. மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.