Skip to main content

விபத்தில் உயிரிழந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Three people from the same village who died in the accident

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ளது ஆலத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). கோழி இறைச்சிக் கடை வைத்து நடத்திவருகிறார். மேலும் இவர் கூடுதலாக மர வியாபாரமும் செய்துவருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான சரவணன் (32) ஆகிய இருவரும் நேற்று (30.06.2021) காலை ஆலத்தூரில் இருந்து மர வியாபாரம் சம்பந்தமாக ஒரு ஆட்டோவில் சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அதே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதே நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.

 

ஆலத்தூர் அருகே அந்த லாரி மணிகண்டன் ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த ராஜேந்திரன், சரவணன், ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சேதமடைந்த ஆட்டோவை அப்புறப்படுத்தினர். விபத்து நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அவர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார்.

 

விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஆலத்தூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த மாதம் இதே பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஜெயலட்சுமி என்ற கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவத்துக்கு ஏற்றிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் சமீபகாலமாக அடிக்கடி விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன. காவல்துறை போக்குவரத்துத் துறை விபத்துகளைத் தடுப்பதற்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து வாகன ஓட்டிகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.