Three passed away in land issue

Advertisment

நெல்லை அருகேயுள்ள தாழையூத்தின் அருகில் உள்ளது நாஞ்சான்குளம் கிராமம். இந்தக் கிராமத்தின் அழகர்சாமி, அழகுமுத்து ஆகியோர் உறவினர்கள். இவர்கள் இரண்டு குடும்பங்களும் தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வாரிசுகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்திற்கான நிலமும் உள்ளதாம்.

இந்த நிலையில், அழகர்சாமி குடும்பத்தைச் சேர்ந்த ஏசுராஜ் தங்களின் குடும்பத்திற்காக வீடு கட்ட ஏற்பாடுகளைச் செய்தவர், ஆழ்துளைக் கிணறு அமைக்க நேற்று மதியம் ஏற்பாடு செய்திருக்கிறார். இதனை அழகுமுத்து குடும்பத்தினர் ஆட்சேபனை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு தரப்புகளுக்குள் மோதலாகியிருக்கிறது.

இந்த மோதலில் அழகர்சாமி குடும்பத்தைச் சேர்ந்த ஏசுராஜ், மரியராஜ், வசந்தா மூவரும் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அழகுமுத்து குடும்பத்தை சேர்ந்த ஆமோஸ் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். பலியான மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதர சகோதரி. படுகாயமடைந்தவர்கள் இவர்களின் உறவினர்கள். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானூர் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் உடல்களை போஸ்ட் மார்ட்டத்திற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்த மானூர் போலீசார் கொலைக்குக் காரணமானவர்களைத் தேடி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக மூன்று பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பீதியிலிருக்கிறது நெல்லைப் பகுதி.