சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 20ம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.
மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகக் குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை முதல்வர் அவர்களுக்கு அறிவுரை வழங்கியும் பெற்றோர் குழந்தைகளை வளர்க்க முடியாது என மீண்டும் தெரிவிக்கக் குழந்தைகளை மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் பின் எடை குறைவாக இருந்த அந்தக் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகத்தால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. குழந்தைகளின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததால் 3 பெண் குழந்தைகளையும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளைப் பார்வையிட்டார். இந்நிலையில் மூன்று பெண் குழந்தைகளும் மாவட்ட ஆட்சியர் முன்பு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.