Skip to main content

45 நாட்களில் மூன்று மாடி மருத்துவமனை... சாதனை பட்டம்பெற்ற அமைச்சரின் உழைப்பு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

Three storey hospital in 45 days ... The work of the minister who got the award

 

தமிழ்நாட்டில் புதிதாக திமுக அரசு பொறப்பேற்று பல்வேறு செயல்பாடுகளில் வரலாற்றுச் சாதனை படைத்துவருகிறது. அதில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடி ஏறக்குறைய 70 ஆயிரம் சதுர பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற வருடம் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

 

அதன்படி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றிலும் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் சென்ற அதிமுக ஆட்சியில் மருத்துவமனையை விரிவுபடுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது. நோயாளிகள் சிகிச்சைக்கு வேறு வழியின்றி கடுமையாக சிரமப்பட்டனர். இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, கரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதும் அதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதும் போதிய அளவு ஆக்ஸிஜன் படுக்கை வசதி இல்லாததையும், அமைச்சரான அடுத்த நாளே பெருந்துறை மருத்துவக் கல்லூரி சென்று களத்தில் இறங்கி ஆய்வுசெய்த அமைச்சர் சு. முத்துச்சாமி பல்வேறு தற்காலிக ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் செய்தார்.

 

Three storey hospital in 45 days ... The work of the minister who got the award

 

அதோடு நிற்காமல் புதிய மருத்துமனை கட்டடம் உடனடித் தேவை என முடிவு செய்து செயலில் இறங்கினார். ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசினார். உடனே அந்த நிறுவனங்கள் உதவ வந்தன. அவர்களின் முழுமையான பங்களிப்புடன் ரூபாய் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் சென்ற மே மாதம்  18ஆம் தேதி 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டடம் நவீன தொழில்நுட்ப முறையில் அதன் கட்டுமானப் பணி தொடங்கியது. 45 நாட்களுக்குள், ஜூலை 1ஆம்  தேதி, அவை முழுமையாக முடிக்கப்பட்டது. அதிநவீன பிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் மூலமாக மருத்துவமனையைக் கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைத்ததற்கும், மேலும் கரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் நோக்காமல் பொது நலனிற்காக இப்பணியை மேற்கொண்டுதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவில் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகாடமி மற்றும் தமிழ்நாடு அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அவர்கள் சார்பாக சாதனைக்கான சான்றிதழை நேற்று (07.07.2021) வழங்கினார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர். இதுகுறித்து ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், “கரோனா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவர்களும் கூறிவருகின்றனர். அவ்வாறு வரும்போது இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுவதும் பயன்படுத்தப்படும். கரோனா தொற்று முழுவதும் முடிந்தவுடன் இந்த மருத்துவமனை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அனைத்து வகை நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்படும்” என்றார். மூன்றடுக்கு பிரம்மாண்ட கட்டட பணியை உடனிருந்து கவனமாகப் பார்வையிட்டு அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை ஊக்குவித்து விரைவாக கட்டி முடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி சாதனைப் பட்டம் பெற்றுள்ளார் சீனியர் அமைச்சரான சு. முத்துச்சாமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.