Skip to main content

‘நல்ல நேரம்’ லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவருக்கு கெட்ட நேரம்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

three arrested  who sold lottery tickets

 

நாகூரில் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் துவி பல ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களைக் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் பணம், இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

நாகை மாவட்டம், நாகூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தன. லாட்டரி சீட்டு மோகத்தில் கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழந்து பரிதவித்து வருவதாகவும், இதனைத் தடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் அளித்தனர். 

 

இது குறித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையிலான தனிப்படை போலீசார், நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தெத்தி சமரசம் நகரைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 

 

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், நாகூர் தெத்தி பகுதியில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்துள்ளதாகவும், அங்கு ஏஜென்ட் பதுங்கி இருப்பதாக போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘நல்ல நேரம்’, ‘குமரன்’, ‘விஷ்ணு’ என்ற பெயரில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகளையும், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

 

மேலும் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் துவி பல ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி வந்த லாட்டரி சீட்டு அச்சிட்டு விற்பனை செய்து வந்த பிரபல ஏஜெண்டுகளான திருவாரூரைச் சேர்ந்த முருகன் அவரது கூட்டாளி ஜெய்லானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

நாகூரில் "நல்ல நேரம்" லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பிரபல ஏஜெண்டுகள் பிடிபட்ட சம்பவத்தில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.